Wednesday 19 September 2012

Rathnavel Natarajan பின்னூட்டம்


Rathnavel Natarajan
8:22 AM (4 minutes ago)
to me
ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி ஒரு நண்பர் எழுதியிருக்கிறார்.  பள்ளிப் பருவத்தில் இங்கிருந்திருக்கிறார்.  எங்கள் ஊரை எப்படி ரசித்திருக்கிறார் பாருங்கள்.  நீங்களும் படித்துப்பாருங்கள்.  நன்றி திரு சுவாமிநாதன்.
நன்றி.  நூலகம் கதிரவன் கடை அருகே மாற்றப் பட்டிருக்கிறது.  யானை இருக்கிறது.  பழைய ஸ்டேட் பேங்க் கட்டிடத்தில் இருக்கிறது.  அது முதலில் யானை லாயமாக இருந்தது.  பின்பு பேங்க் வந்தது.  

பின் குறிப்பு- நான் இணையதளத்தில் வேறு தளங்களில் தேடல்களைச் செய்யும்போதும்  திரு ரத்னவேல் நடராஜன் அவர்களின் பல பின்னூட்டங்களை பார்ப்பேன். சிறப்பாக இருக்கும்.திருவில்லிபுத்தூர் மீது அவருக்கு உள்ள ஈர்ப்பு எனக்கு பொறாமையை தரும். 

ருசி குறையாத புளிய மரத்தடி கடை அல்வா ...




2012 செப்டம்பர் 12 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ...
ஒரு திருமணத்திற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லவேண்டும் என்று முடிவு எடுத்தவுடனேயே இனம் புரியாத பரவசம் தொற்றிக் கொண்டது. ஊரைவிட்டு வந்து 36 ஆண்டுகள் ஆன பின்னரும் நினைவுகள் இழுக்கின்றன. 

காலையில் பொதிகையில் போய் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேசனில் இறங்கிய போது
பெரிய வித்தியாசம் எதையும் உணரவில்லை. கொஞ்சம் கூடுதலாக மேற்கூரை, உட்காருவதற்கு இடங்கள் என்பதை தவிர. ஆட்டோவில் போகும்போது வீடுகள் கொஞ்சம் அதிகமாகி இருப்பது தெரிந்தது.திருப்பாற்கடலில் சொட்டுத் தண்ணீர் இல்லை. 1976 ல் ஆண்டாள் தியேட்டர் கிடையாது. ஆனால் அதற்கு அருகில் உள்ள ரைஸ் மில் இப்போதும் இருக்கிறது. மடவார் வளாகம் சென்றேன். சிவன் கோயிலுக்கு எதிரே உள்ள குளம் செம்மை செய்யப்பட்டிருப்பது பார்த்தபோது மகிழ்ச்சியாய் இருந்தது. அப்படியே நடந்து 
மேல ரதவீதி வந்தபோது அச் சந்திப்பில் ஓர் வாடகை நூலகம் இருந்தது ஞாபகம் வந்தது.மஞ்சள் பூ மர்மம் போன்ற படக் கதைகளை ஒரு நாள் வாடகை ஐந்து பைசாவிற்கு  வாங்கிப் படித்திருக்கிறேன். மேலரதவீதி சந்து வழியாக மேலமாட வீதி வந்தபோது அங்கிருந்த இந்து நடுநிலைப்பள்ளி - அப்போது ஐந்தாம் வகுப்பு மட்டும் அங்கிருந்தது- இல்லாதது ஏமாற்றத்தை தந்தது. அதன் ஒருபகுதி இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் எழும்பிக் கொண்டிருக்கிறது. மேலமாடவீதி வழியாக ஆண்டாள் கோயிலுக்குள் நுழைந்தபோது யானை 
லாயம் காலியாக இருந்தது. யானை இல்லாத கோயில் வெறிச்சென்று. கோயில் வளாகக்கடைகளில் ல் கட்டிடம் என்பதால் அதே குளுமை. 1970 களின் ஆரம்பத்தில் துவக்கப்பட்ட சர்வோதய கடையில் நாக்கை தொங்கவிட்டு அமர்ந்திருக்கும் நாய் பொம்மை இருக்கா என்று தேடினேன்.அதுதான் அக்கடை ஆரம்பித்த போது கடையின் முன்னால் வைக்கப்பட்டிருக்கும். கோயிலில் கூட்டம் இல்லை. ஒரு வழிகாட்டி கோயில் பெருமைகளை கூறினார். பெரும்பாலும் புதிதாக ஒன்றும் சொல்லாவிட்டாலும் கேட்க சுவாரஸ்யமாக 
இருந்தது. பின்னர் வடபத்திர சயனர், ஆண்டாள் பிறந்த துளசி மாடம் பார்த்துவிட்டு எதிரே உள்ள கல்யாண மண்டபத்தில் ஊருக்கு வந்த நோக்கத்தையும் முடித்தேன். சன்னதி தெருவில் இருந்த நூலகம் அங்கு இல்லை.அங்கே இருந்த ஒருவரிடம் கேட்டேன். சத்தியம் செய்தார். நூலகம் அங்கே இருந்ததே இல்லையென்று. நான் வாதாடவில்லை. வாசலில் விற்ற கொய்யாபழத்தை வாங்கிவிட்டு நகர்ந்தேன். அரங்க நாதர் சன்னதி தெருவில் 
முட்புதற்குள் இருந்த அரங்கநாதருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. சக்கரக் குளம் பாழடைந்து விட்டது.பழைய முனிசிபல் ஆபிஸ் இடிக்கப்பட்டுவிட்டது. புதுதெருவின் ஆரம்பத்தில் இருந்த டென்னிஸ் மைதானம் காணோம். 

36 ஆண்டு முந்தைய உறவுகள் சிலவற்றை சந்தித்தது நெகிழ்வான அனுபவம். எனது நண்பர்கள் டாக்டர் ஸ்ரீநிவாசன்,ராதாசங்கர் (கதிரவன் ஓட்டல்) மதன்சிங் ( புளிய மரத்தடி லாலா கடை) ஆகியோரை சந்தித்தேன். புளிய மரத்தடி கடை அல்வா இப்போதும் ருசி குறையாமல் இருக்கிறது.

Friday 12 November 2010

உமையாள் விலாஸ்

திருவில்லிபுத்தூரின் அன்றைய பிரபலமான ஓட்டல்களில் ஒன்று. வடக்கு ரத வீதியில் அமைந்திருந்த அது மாலை நேரம் நிரம்பி வழியும். அதை நடத்திய குடும்பத்துப் பையன் பேச்சியப்பன் எனது வகுப்பறைத் தோழன். இரண்டாண்டுகளுக்கு முன்பு அவனைத் தேடிச் சென்று தேரடி தெருவில் சந்தித்துப் பேசிவிட்டு வந்தேன்.

வடக்கு ரத வீதி உமையாள் விலாஸ் மூடப்பட்ட பின்னர் கீழ ரத வீதியில் சிறிது காலம் மின் வரியா அலுவலகத்திற்கு எதிரே இருந்தது. பின்னர் டெலிபோன் இணைப்பகத்தில் இருந்து வெங்கடேஸ்வரா தியேட்டர் செல்கிற தெருவின் இடது முனையில் இருந்தது.

அந்தக் காலத்தில் சுவையான உணவிற்கு பலரும் தேடிச் சென்ற ஓட்டல் அது.

இந்து உயர்நிலைப் பள்ளி மைதானம்

பள்ளிக்கூடம் ஆண்டாள் கோவில் பக்கத்தில் இருந்தாலும் விளையாட்டு மைதானம் 3 கி மீ தூரத்தில் சி எம் எஸ் பள்ளிக்கு அருகில் இருந்தது. சி எம் எஸ் மைதானமும், இதுவும் ஒரு கம்பி வேலியால் பிரிக்கப்பட்டு இருக்கும். வாரம் ஒரு நாள் மைதானத்திற்கு செல்லவேண்டும்.

மேலரத வீதி, நாடகசாலைத் தெரு, திருமுக்குளம் வழியாக செல்லவேண்டும். நாடக சாலைத் தெரு பார்க்க அழகாக இருக்கும். முதல் முதலில் கனரா வங்கி கிளை இத்தெருவில் வந்த நினைவு உள்ளது. வடக்கு மாட வீதியில் ஸ்டேட் வங்கி இருந்தது. திருமுக்குளத்திற்கு சேருகிற இடத்தில் மலைச் சாலை போல செங்குத்தாக இருக்கும். திருமுக்குளமும் எழில் மிக்கது. அக்குளத்திற்குள் சிறிய சதுரமாக ஒரு குளம் இருக்கும். அதற்குள் சுழல் இருக்கும் என்பதால் அதில் இறங்க எவரும் யோசிப்பார்கள். கொஞ்சம் தாண்டினால் சி எம் எஸ் இணைப்புக் கட்டிடம் ஒன்று. கூடை பந்து மைதானம் உண்டு. இன்னும் கடந்தால் இடது பக்கம் ஒரு கிறித்தவ மிசனரி கட்டிடத்தின் நீண்ட காம்பவுண்டு இருக்கும்.

அந்த ஊரில் ஹாக்கி பலரும் விரும்புகிற விளையாட்டு. கபடி உண்டு. கிரிக்கெட் உண்டென்றாலும் இன்று இருக்கிற அளவுக்கு அதன் ஆதிக்கம் அப்போது கிடையாது. இரண்டு பள்ளிகளின் நூற்றுக் கணக்கான மாணவர்கள் விளையாடுகிற காட்சிகள் கண் கொள்ளதவைதான். காக்கி-வெள்ளையில் இந்து பள்ளி மாணவர்களும், ஊதா-வெள்ளையில் சி எம் எஸ் மாணவர்களும் மைதானத்தை கலக்குவார்கள்.

Wednesday 10 November 2010

திருவில்லிபுத்தூர் பெரிய தேர்


திருவாரூர் தேர்தான் தமிழ்நாட்டில் பெரிது என்று திருவில்லிபுத்தூர்காரர்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
அப்படித் தங்கள் ஊர்த் தேர் பற்றி பெருமை உண்டு.

17 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேர் 1974 ல் மீண்டும் ஓட ஆரம்பித்தது.( ஓர் ஆண்டு முன் பின் இருக்கும்) முதல் வருடம் மக்கள் மத்தியில் இருந்த ஆர்வம் சொல்லி மாளாது. அந்தத் தேரின் வடத்தை கைகளில் பிடிக்க முடியாது. அவ்வளவு பெரியது. கக்கத்தில் வைத்து கைகளால் தாங்கி இழுக்க வேண்டும். அதைத் தூக்கி இழுப்பதற்குத் தயாராவத ற்கே ஆயிரக்கணக்கானோர் தேவைப்படுவார்கள். தேரின் மேலே முதல் தட்டில் ஒரு பெரிய மத்தளம் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு முறை இழுக்க வேண்டுமெனும்போதும் அதை ஓங்கி இசைப்பார்கள். எல்லோரும் இழுக்க ஆரம்பிப்பார்கள். தொடர்ந்து இழுக்க முடியாது. ஒவ்வொரு முறை இடைவெளி விடும்போதும் தேரின் முன்பக்கம் நின்று இழுப்பவர்கள் கவனமாக வடத்தை உடனே கைகளில் இருந்து விடுவிக்காவிட்டால் உள்ளே இழுத்து சக்கரங்களுக்குள் போட்டு விடும். வடத்தின் கடைசி நுனியைப் பிடித்து நிற்பவர்களும் கைகளில் இருந்து விடுவிக்காவிட்டால் இழுத்து கீழே போட்டுவிடும்.





தேர் ஓடும்போது ரோட்டில் அதன் சக்கரங்கள் பதிந்து ஏற்படுத்துகிற பள்ளம்
மூன்றடிக்கும் மேலே இருக்கும். தெற்கு ரத வீதியில் இருக்கிற தாலுகா அலுவலகத்திற்கு அருகில் தேர் செல்லும்போது அக் கட்டிடத்தில் மோதுவது போல் போய் நின்றது. மேலரத வீதி திருப்பத்தில் தேரின் கலசம் மேலே இருந்து விழுந்துவிட்டது. 3 பேர் இறந்து போனார்கள். இவ் விபத்தின் போது நான் அந்த இடத்தில் இருந்தேன். ஒன்றரை மாதம் அங்கேயே தேர் நின்று போனது. அதற்குப் பிறகு கனமான கலசத்திற்குப் பதிலாக வெறும் மூங்கில்களிலான வர்ணம் பூசப்பட்ட கலசமே மேலே வைக்கப் பட்டது. இப்படி தேர் நிலைக்கு வந்து சேர முதல் ஆண்டு 81 நாட்கள் ஆனது.

அடுத்த ஆண்டு 12 நாட்கள் ஆனதென்று நினைக்கிறேன். மூன்றாமாண்டு தேர்த் திருவிழாவுக்கு நான் அந்த ஊரில் இருக்கவில்லை. மூன்று நாளில் தேர் நிலைக்கு வந்து விட்டது என்று நாளிதழ்களில் படித்தபோது வியப்பாக இருந்தது.

தேர் நகர்வதற்கு பினனால் பெரிய அடிக் கட்டை போட்டு நெம்புவார்கள். சக்கரத்தின் முன்பக்கம் பாதையை நெறிப்படுத்த சக்கை போடுவார்கள். ஒன்றரை ஆளின் உயரத்திற்கு மேலே இருக்கிற சக்கரங்கள் நகரும்போது கம்பீரமாய் காட்சியளிக்கும். அடிக்கட்டையையும், சக்கையையும் யார் போடுவார்கள், தேரின் மேலே சாமியோடு சாமியாய் யார் வர இயலும் என்றெல்லாம் அதிகம் நான் சிந்தித்ததில்லை.

தேர் இழுக்க ஆட்கள் வேண்டுமென்பதால் வீதிகளில் மைக்கில் அறிவிப்பார்கள். மாதக்கணக்கில் ஓடிய முதலாண்டில் கேட்க வேண்டுமா? தேர் இழுக்கிற அன்றைக்கு இந்து உயர்நிலை,நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுவிடுவார்கள். பல பேர் கிரிக்கெட் விளையாட போய் விடுவார்கள். கூட்டம் சேராமல் திரும்ப திரும்ப அறிவிப்பு செய்யப்பட்ட நாட்களும் உண்டு.

தேர்த் திருவிழாவுக்கு வெளியூரிலிருந்து எல்லா வீடுகளுக்கும் நண்பர்களும், உறவினர்களும் வருவார்கள். ஆண்டாள் கோவிலில் நடைபெறுகிற 10 நாள் விழாவிற்கும் வெளியூர் கூட்டம் நிறைய வரும். கோவில் வாசலில் ஒரு நாள் யானை ஒரு காலைத் தூக்கிக்கொண்டு மாற்று திறனாளி போல நடக்கும். ( மாற்று திறனாளி என்ற சொல்லாடலை தி ஹிந்து நாளிதழ் பத்திரிக்கையாளர் திரு கரிமேல்லா சுப்ரமணியன் ஒரு நிகழ்ச்சியில் மறுதலித்தார். அவர் கண்பார்வை அற்றவர்) தேர்க் கதைக்கு மீண்டும் வருகிறேன்.

தேர் இழுப்பதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டன. மழை வருவதற்காக என்ற காரணம் மக்களின் மனத்தைக் கவ்வியிருந்தது. பட்டர் ஒருவரின் கனவில் ரங்கமன்னார் வந்து சொன்னார் என்ற செய்தி ஒன்றும் உலா வந்தது. இதே காலத்தில் திருவண்ணாமலையில் ( ஸ்ரீவிக்கு அருகே) ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனுக்கு இயேசு காட்சியளித்ததாக ஒரு பரபரப்பு ஏற்பட்டது. நம்பிக்கைகளின் அடிப்படையிலான இச்செய்திகள் புதிய மத நிகழ்ச்சிகளுக்கு வழிவகுத்தன. கிறித்தவர்கள் வழிபாடு இடமாக அக் காட்சியிடம் மாற்றப்பட்டது.

ஓடாமல் இருந்த திருவாரூர் தேரும் பின்னாளில் ஓடுவதற்கு வழி வகுக்கப் பட்டது. பட்டர் கனவில் ரங்கமன்னார் வந்தாரோ இல்லையோ திருவில்லிபுத்தூர் தேர் அசைகிற அழகு இன்னும் என் கண்களில் நிற்கிறது.

Tuesday 9 November 2010

தண்ணீர் ... தண்ணீர்..



courtesy: kisanbachao.blogspot.com

கோமல் சுவாமிநாதனின் அத்திப் பட்டியை திரையில் பார்த்த போது எனக்கு அது ஒன்றும் வியப்பாக இல்லை. ஏனெனில் திருவில்லிபுதூரின் தண்ணீர் பற்றாக்குறை பல்லாண்டுப் பிரச்சினையாக இருந்தது.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக மழையே இல்லை என்று எனக்கு நினைவில் இருக்கிற காலம் தொட்டுப் பேசிக் கேட்டிருக்கிறேன். திருவில்லிபுதூரின் பெரிய தேர் 1956 லிருந்து ஓடாமல் இருந்ததுதான் காரணம் என்று பரவலான நம்பிக்கை உருவாக்கப்பட்டது. ஒரு பட்டரின் கனவில் ரங்க மன்னார் வந்து சொன்னதாக ஒரு செய்தியும் உலா வந்தது. இப் பின்புலத்தில்தான் பெரிய தேர் உலா மீண்டும் துவங்கியது.

இதே காலத்தில் தமிழகம் முழுக்க மழை பெய்யாமல் கிருபானந்த வாரியார், குன்னக்குடி வைத்யநாதன் போன்றோர் சென்னை கடற்க் கரையில் பிரார்த்தனை, இசை ஆகியவற்றை அரங்கேற்றியது நினைவில் உள்ளது. சோவியத் யூனியன் நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு செயற்கை மழைக்கான முயற்சிகளும் செய்யப்பட்டன. பஞ்சமும் சேர்ந்து கொண்டது. அப்போது திருவில்லிபுத்தூர் இருந்த ராமநாதபுரம் மாவட்டம்தான் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி ஆகும். மக்கள் கப்பைக் கிழங்கை உணவாகக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எம் ஜி ஆர் திறந்த கஞ்சித் தொட்டிகள் மிகப் பெரிய அரசியல் ஆயுதங்களாக மாறின. கலைஞரின் அன்றைய ஆட்சியின் மிகப் பெரிய களங்கமாக அது கருதப்பட்டது.எங்களைப் போன்ற இல்லங்களிலும் அரிசிக்குப் பதிலாக கேப்பை (கேழ்வரகு), கோதுமை ஆகியவற்றுக்கு நகர வேண்டியிருந்தது.

அப்போது வீடுகளில் நகராட்சி குடிநீர் ஒரு நாளைக்கு ஐந்தாறு குடங்கள் மட்டுமே வரும். அதுவும் குழாய் மட்டத்தை இறக்கிக் கொண்டே சென்றால்தான் தண்ணீர் கிடைக்கும். போட்டி போட்டுகொண்டு பக்கத்து பக்கத்து வீட்டில் குழாய் இறங்கிக் கொண்டே போகும். பற்றாக்குறை எப்படி பொறாமைகளை உருவாக்கும், மனித உறவுகளை பாதிக்கும் என்பதை அனுபவ ரீதியாகக் கண்டிருக்கிறேன்.

அரங்கநாதர் சன்னதி தெருவும்,சக்கரைக்குளமும் சந்திக்கிற முனையில் ஒரு அடி குழாய் போடப்பட்டது. போர் இயந்திரம் உள்ளே துளை போட துளை போட தண்ணீர் பீச்சியடிப்பதைப் பார்க்க நூற்றுக் கணக்கானோர் திரண்டு நின்றதும், ஆரவாரம் செய்ததும் மறக்க இயலாது.அந்த அடி குழாயில் தண்ணீர் பிடிக்க நீண்ட வரிசை இருக்கும். அதன் வால் பழைய முனிசிபல் அலுவலகத்தின் வாசலையும் தாண்டும். வரிசையில் நிற்கிற நேரம் நட்பு மலர்களும் பூக்கும். சாதாரண மக்களின் அவலங்கள் இப்படிப்பட்ட சின்ன சின்ன சந்தோசங்களில்தான் சிறிது ஈடுகட்டப் படுகின்றன. வரிசைகளில் வரும் சண்டைகளும் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒரு நாளின் முக்கியமான நேரங்கள் இவ்வாறு தண்ணீர் வரிசையிலும், குளியல் துவையலுக்கு அலைவதிலுமே கழிந்ததை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. இப்போதும் சாமானிய மக்களின் நேரங்கள் ரேசன், அரசு பொது மருத்துவ மனை வரிசைகளில் கழியத்தானே செய்கின்றன.

அப்போதெல்லாம் குளிப்பதற்கும், துவைப்பதற்கும் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் போய் பம்ப் செட்டிற்கு போவோம். சாணியைக் கரைத்து குழாய் வழியாக ஊற்றி அதை ஸ்டார்ட் செய்தவுடன் முதலில் சாணிக்கரைசல் அழுக்காக வெளியே வரும். முதல் முதலில் தலையை உள்ளே விட கடும் போட்டி இருக்கும். ஆனால் அவ்வளவு தண்ணீர் பற்றாக்குறை என்பதாலோ என்னவோ நிறைய ஆண்கள் தோளில் பெரிய வெண்கலப் பனைகளில் நெடுந்தூரம் தண்ணீர் சுமந்து வருவார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதலில் அடித்த மழை பனிக்கட்டி மழையாக இருந்தது. எங்கள் வீடு ஓட்டு வீடு என்பதால் யாரோ கல்லெறிவது போல சப்தம். ரோடு முழுக்க ஆனந்தப் பெருக்கு. பனிக்கட்டிகளை ஓடி ஓடி அள்ளியவர்கள் குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்களும்தான்.

யானை

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்ட நேரங்கள் உண்டு. இரண்டு தடவை மதம் பிடித்து ஓடிய போது சுவாரஸ்யமான சில செய்திகள் உண்டு. ஒரு முறை மேற்கு தொடர்ச்சி மலைப் பக்கம் ஓடிச் சென்றது. இப்படி ஓடிய யானை திரும்ப ஊருக்குள் வந்த போது ஒரு பிள்ளையார் கோயில் அருகில் போய் நின்று விட்டது. நாளிதழ்களில் அது பிள்ளையார் முன்பாக மண்டி போட்டுக் கும்பிட்டதாக செய்தி போட்டார்கள். ( பிள்ளையார் பால் குடிக்கும்போது யானை மண்டி போடுவது நடக்க முடியாத ஒன்றா?). ஒரு முறை பாகன் ஓடுகிற யானை மேல் இருந்து தப்பிக்க மரத்தின் கிளை ஒன்றை பிடித்து தொங்கியதாக பரபரப்பாக பேசிகொண்டார்கள்.

1970 களின் முற்பகுதியில் ஓராண்டு காலம் கோவிலில் யானை இல்லாமல் இருந்ததுண்டு. யானை இல்லாத போது ஏதோ ஒன்றை அக்கோவில் இழந்ததைப் போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.

யானை சாணி போட்டுவிட்டு நகர்ந்தவுடன் சிறுவர்களெல்லாம் ஓடி போய் அதை மிதிப்பார்கள். அதற்கு மருத்துவக் குணம் உண்டு என்று பெரியவர்கள் சொல்வார்கள். யானைக்கு காணிக்கை கொடுத்தால் யானை முடியைப் பிடுங்கித் தருவார்கள். அதைக் கைகளில் கட்டிகொள்வார்கள்.

யானை குளியலுக்காக திருப்பாற்கடல் செல்லும்போது நாங்கள் குடியிருந்த அரங்கநாதர் சன்னதி தெரு வழியாகவே போகும்.