Friday 5 November 2010

உலகம் சுற்றும் வாலிபன்

இராஜ பாளையம் தனலட்சுமி தியேட்டரில் போய் உலகம் சுற்றும் வாலிபன் பார்த்தேன். புதுப் படங்கள் முதலில் விருதுநகர், இரண்டாவது சுற்றில் ராஜபாளையம், மூன்றாவது சுற்றில்தான் திருவில்லிபுத்தூருக்கு வரும். உலகம் சுற்றும் வாலிபன் சென்னையில் தேவி பாரடைஸ், உமா , அகஸ்தியா - மதுரை மீனாக்ஷி - திண்டுக்கல் NVGB- ராமநாதபுரம் சண்முகா-கம்பம் கிரேசென்ட்-பழனி ஓம் சண்முகா ஆகிய தியேட்டர்களில் 1973 மே மாதம் 12 அன்று திரைக்கு கொண்டு வரப்பட்டது. மே மாதம் 20 ஆம் தேதி தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான நாள். அன்றுதான் அ தி மு க பிறந்த பிறகு நடைபெற்ற முதல் தேர்தல். திண்டுக்கல் இடைத் தேர்தல். நான்கு முனைப் போட்டி. பெருந்தலைவர் காமராஜரும் காலத்தில் ஸ்தாபன காங்கிரசுக்காக பிரச்சாரக் களத்தில் இருந்தார். அந்நேரம் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானதால் அது அரசியல் சர்ச்சையை தூண்டி விட்டது. அதை வெளிவர விடாமல் தடுக்க முயற்சிகள் இருந்தன என்ற குற்றச் சாட்டுக்களும் பரபரப்பை உண்டாக்கியது. விருதுநகர் நாராயணசாமி தியேட்டரில் போய் அதை பார்க்க துடியாய்த் துடித்தும் முடியவில்லை. பிறகு ராஜபாளையத்தில் போய்ப் பார்த்த பிறகுதான் ஆறுதலாக இருந்தது. திண்டுக்கல் இடைத் தேர்தலில் அ தி மு க 260930 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. ஸ்தாபன காங்கிரஸ் 119032 வாக்குகளே வாங்கியது. ஆளும் தி மு க மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அப்பாவுடன் வேலை பார்த்த மம்சாபுரத்தைச் சேர்ந்த திரு. சண்முகசுந்தரம் என்பவரோடு தேர்தல் பந்தயம் போட்டு ரூ 5 க்கு ஒரு சில்வர் தட்டு வாங்கிக்கொடுத்தார். மிக மிக அன்பாக என்னிடம் இருந்தவர். அவர் நாங்கள் மதுரையில் குடி மாற்றிய பிறகு சில ஆண்டுகளுக்குள் மறைந்து விட்டார்.

உலகம் சுற்றும் வாலிபனின் வசூல் விவரங்கள், ஓடிய நாட்கள் ஆகியன கூட அரசியலில் உன்னிப்பாக பார்க்கப்பட்டன. மதுரையில் 217 நாட்கள் ஓடியது. விருதுநகரில் 50 நாட்கள் ஓடியதாக நினைவு. அன்றைக்கு வந்த எல்லோருக்கும் ஒரு மஞ்சள் நோட்டு ஒன்றில் வசூல் விவரங்களை பின் அட்டையில் போட்டுக் கொடுத்தார்கள்.

தமிழக அரசியலில் திரை உலகத்தின் தாக்கம் வெகுவாக இருந்ததை நெருக்கமாக கவனித்திருக்கிறேன்.

No comments:

Post a Comment