Thursday 4 November 2010

அப்பாவின் மூன்று நண்பர்கள்

அப்பாவின் மூன்று நண்பர்களை மறக்க இயலாது. அவர்களில் ஒருவர் மறைந்து விட்டார்.

மறைந்தவர் பெயர் திரு வெங்கடாசலம். குண்டாக இருப்பார். எங்கள் வீட்டு உள்திண்ணையில் அவர், திரு முத்தையா . எங்கள் அப்பா மூவரும் அமர்ந்து மணிக் கணக்காகப் பேசுவார்கள். வெங்கடாசலம் நகைச் சுவையாகப் பேசுவார். அவர் வரும்போது அவரின் வளர்ப்பு நாய் 'ப்ளாக்கி' கூடவே வரும். அவரைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான செய்தி ஒன்று உண்டு. ஒரு முறை நண்பர்களோடு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு போய் வந்தார். நண்பர்களெல்லாம் பக்தியோடு போகிறவர்கள்.இவர் நட்புக்காக போனவர். அங்கு போய் அவர்கள் நடக்கிற வேகத்திற்கு ஈடு கொடுத்து இவரால் நடக்க முடியவில்லை. அவர்களெல்லாம் சுவாமியே அய்யப்போ ! என்று சொல்லி நடக்க நடக்க இவர் தனது பெரிய சரீரத்தை தூக்கிக்கொண்டு ' சுவாமியே பையப்போ !' என்று பதில் கோஷத்தோடு பின்னாலே போவாராம். அந்த அய்யப்போவுக்கு ஈடாக பையப்போ(மெல்ல நட ) என்று ரய்மோடு சொன்னதை சுவையோடு சொல்வார். ஒரு அதிகாலையில் நெஞ்சு வலி வந்து இறந்து விட்டார். அவர் மகள் தற்போது சென்னை எல் ஐ சி யில் பணி புரிகிறார்.

திரு முத்தையா அவர்கள் சைக்கிளில் தினமும் வருவார். அவர் எங்கள் வீட்டு உடைமையாளரிடம் கணக்கு வேலை பார்த்து வந்தவர். அவர் சைக்கிளை நிறுத்தியவுடன் நிற்கிற இடத்திலேயே பெடல் போடுவேன். அவரது குடும்பமே எங்களுக்கு நெருக்கமானது. திரு நடராஜன், ராஜேஸ்வரி, மேடையாண்டி ஆகியோர் பெயர்கள் நினைவில் உள்ளது. அவரின் அம்மா பெரிய பாம்படம் போட்டிருப்பார்கள். இவரின் அசாத்திய பொறுமையும், நிதானமும் என்னை வியக்க வைக்கும்.

திரு கிருஷ்ண சிங் பேருந்து நிலையத்திற்கு அருகில் லாலாக் கடை வைத்திருந்தார். அவர் கடை அல்வாவுக்கு நிறைய மவுசு உண்டு. அவர் வீடு சன்னதித் தெருவின் முதல் வீடு ஆகும். அவர் வீட்டிற்கு அல்வா ரெடி ஆகிற நேரத்திற்கு போனால் சூடாக கை நிறைய அல்வா கிடைக்கும். பால் கோவாவும் டேஸ்டாக இருக்கும். அவரின் மகள் சாந்தி எனது மூத்த சகோதரியின் பள்ளித் தோழி. மகன் மதன் என்னோடு படித்தவன். சுந்தர் சிங், அம்சாஎன்ற மகன், மகளும் நினைவில் இருக்கிறார்கள். இரவு அவரின் கடையில் அப்பாவின் நண்பர்கள் டேரா அடித்துவிட்டு வீடுகளுக்குத் திரும்ப நடுநிசியைத் தாண்டி விடும்.

No comments:

Post a Comment