Monday 1 November 2010

தேரடித் திடல்


திருவில்லிபுத்தூரின் அரசியல் பள்ளிக்கூடம் என்று
தேரடித் திடலைச் சொல்லலாம்.எத்தனையோ பொதுக்
கூட்டங்கள் இங்கு நடைபெற்றன.அப்போதெல்லாம் இப்போதைய
பெற்றோர் போல படி..படி.. என்று பிள்ளைகளை உயிரை
வாங்குகிற டார்ச்சர் எனக்குஇருந்ததில்லை.மாணவப் பருவத்தை
நன்றாக ரசித்தேன் எனலாம்.இரவுப் பொதுக்கூட்டம்
என்றால் மாலை 6 மணிக்கெல்லாம் மைக் செட்டுக்காரர்
பாட்டைப் போட்டு அமர்க்களப்படுத்தஆரம்பித்து விடுவார்.
வாண்டுகளெல்லாம் கூட்டம் ஆரம்பிக்கும்வரை போடுகிற
கும்மாளத்திற்கு குறைவு இருக்காது.தேரடிக்கு எதிரே
ஒரு விறகுக் கடை உண்டு. பக்கத்தில் ஒரு டீக் கடை உண்டு.
அப்போதெல்லாம் கருப்பட்டி காபி கிடைக்கும். தேருக்கு
வலது பக்கம் இருந்த பெரிய காலி இடத்தில் சர்க்கஸ்,
மிருகக் காட்சி ஆகியன ஏற்பாடு ஆவதுண்டு.

தந்தை பெரியார் பேசுவதை இரண்டு தடவை கேட்டிருக்கிறேன்.
கோடையில் ஆண்டாள் நீராவிப்பள்ளியில் உள்ள வசந்த
மண்டபத்திற்கு வந்து 10 நாள் தங்குகிற வைபவம் உண்டு.
அந்த காலம் பார்த்தே திராவிடர் கழகம் இக் கூட்டத்தை
ஏற்பாடு செய்வது வழக்கம். தேரில் இருந்து மின் வாரிய
அலுவலகம் வரை கூட்டம் நிரம்பி வழியும். சன்னதி தெரு
பட்டர்கள் ரொம்ப தீட்டு பார்ப்பார்கள்.சாமி எங்கள் தெரு
வழியாக செல்லும் போது தீர்த்தம் வாங்கச் சென்றால் மேலே
கை பட்டுவிடக்கூடாது என்று பட்டர்கள் சீறி விழுவார்கள்.
சேட்டைக்கார பையன்கள் வேண்டுமென்றே இடித்து
விட்டு ஓடி வந்துவிடுவார்கள். சன்னதி தெருவில்
தப்பித் தவறி வசித்த ஒரு சில BC களுக்கு
தீண்டாமை அனுபவம் 1970 களில் ஆழமான காயங்களாக
இருந்தன. பெரியாரின் பேச்சுக்கள் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தின.

ராஜாஜி பேசியும் கேட்டிருக்கிறேன். அவருக்கு கூட்டம்
அதிகம் இருக்கவில்லை. சுதந்திராக் கட்சி அப்போது சிவகாசி
நாடாளுமன்றத் தொகுதியில் போட்டி போடுகிற அளவிற்கு
வளர்ச்சியோடு இருந்தது.

அ.தி.மு.க பிறந்த பிறகுதான் மேடைப் பேச்சுக்களில்
அனல்பறக்க ஆரம்பித்தது. 1971 தேர்தலில்
எம் ஜி ஆர், தி மு க வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த போது
இரவு 10 மணிக்கு வருவார் என்றுதேரடித் திடல் அருகே
காத்திருந்தது நினைவில் உள்ளது. கீழ ரத வீதி முழுவதும் கூட்டம் அலை
மோதியது, 10 மணி..11 .. !2 .. என்று நேரம் ஓடியது, எம் ஜி ஆர்
வருகை தாமதம் ஆகிக் கொண்டே போனது. ஆனால் கூட்டம்
கலையவே இல்லை. எங்கள் வீட்டு வாசலிலேயே உட்கார்ந்து இருந்தோம்.
அதிகாலை 4 மணிக்கு எம் ஜி ஆர் வந்தார், அவரின் வேனில்
பெட்ரோமேக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் முதல் முதலாக அவரைப்
பார்த்தேன்.அதில் இருந்து 10 ஆண்டுகள் அவரின் தீவிர ரசிகனாக இருந்தேன்.
எம் ஜி ஆர் முதல்வர் ஆன பிறகு அவர் அரசு மீது நம்பிக்கை இல்லாத்
தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது CPM தோழர் ஆர் உமாநாத் ஆற்றிய
உரை சிறு பிரசுரமாக வெளியிடப்பட்டது. அந்த உரையை படித்த போதுதான்
எம் ஜி ஆர் மீதான தனி நபர் வழிபாட்டில் முதல் கீறல் என் மனக்
கண்ணாடியில் விழுந்தது.மீண்டும் தேரடித்திடலுககே வருகிறேன்.

எம் ஜி ஆரின் அண்ணன் எம் ஜி சக்ரபாணி ஒரு முறை தேரடித் திடலில்
பேசினார். எனக்கு ஒரு கேள்வி அன்றிலிருந்து இன்று வரை மனதில்
உள்ளது. திருவில்லிபுத்தூர் எம் ஜி ஆரின் கோட்டை.
ஆனால் தனிக் கட்சி ஆரம்பித்து 4 ஆண்டுகள்
ஆன பின்னரும் அந்த ஊருக்கு அவர் வருகை தரவில்லை. ஏன்?
இந்த நேரத்தில்தான் சக்ரபாணியின் வருகைநிகழ்ந்தது.எனவே
எம் ஜி ஆரை பார்க்க வேண்டுமென்ற ஏக்கத்திற்கு வடிகால் போல
எக்கச்சக்கமான கூட்டம். நான் அக்கூட்டத்தில் முன் வரிசையில்
தரையில் அமர்ந்திருந்தேன்.

சைதை தமிழ்ச்செல்வன் என்பவரின் பலகுரல் பேச்சு சிறப்பாக
இருக்கும். தி மு க வின் மணி-சாமி குழுவினரின் கலை
நிகழ்ச்சி மக்களை ஈர்க்கும். போலீஸ் கண்ணன், மாடி லட்சுமி
போன்றோரின் கூட்டங்களுக்கு மக்கள் அதிகமாக வருவார்கள்.
அந்த ஊரில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சிதான் அப்போது பலமாக இருந்தது.
க.சுப்பு , சக்தி கோதண்டம்போன்றவர்கள் பிரபலமான
தலைவர்களாக இருந்தனர். விலைவாசி, தொழிலாளி என்று
அவர்கள் பேசுவார்கள்.சுரத்தே இல்லாமல் கேட்டிருக்கிறேன்.

தேரடித் திடலில் பெரிய தேரின் வடம் சுருட்டி சுருட்டிப்
போடப்பட்டிருக்கும். அதற்குள் உள்ள வட்டத்திற்குள் படுத்துக்
கொள்வது சுகமாக இருக்கும். பொதுக் கூட்டம் முடிந்து நான்
வீட்டுக்கு வராததால் அம்மா தேடி வந்து மைக் செட்டுக்
காரரிடம் விசாரித்து பின்னர் வடத்தின் வட்டத்திற்குள்
இருந்து எழுப்பி அழைத்துப் போன நிகழ்ச்சியும் உண்டு.

1 comment:

  1. ஞாபகம் வருதே. ஞாபகம் வருதே..
    அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்த்தே!

    http://tawp.in/r/1fek

    படிமம்:R krishnasamy Naidu.jpeg (ரா.கி படம் இங்கு உள்ளது)

    http://www.raakee.co.cc

    srither240255@gmail.com

    http://tawp.in/r/1o3v

    ReplyDelete