Wednesday 3 November 2010

திருப்பாற்கடல்

இப் பெயரைக் கேட்பவர்களின் கற்பனை எவ்வளவு விரியும்
என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அமுதம் எத்தனை
லிட்டர் தினமும் கிடைக்கும் என்ற கணக்கு கூட மனதிற்குள்
வந்து போகும். திருவில்லிப்புத்தூரில் இருந்து ராஜபாளையம்
செல்லும் வழியில் தேரடி-சிவகிரி அரண்மனை-கூட்டுறவு
வங்கி கட்டிடம் என இடது பக்க காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக
கடந்து போகும் போது கண்களைத் திருப்பாமல் இருந்தால்
திருப்பாற்கடல் தரிசனம் கிடைக்கும்.

சின்னககுளம்தான்.கரையில் பிள்ளையார் கோயில்.அக்கரையின்
ஆரம்பத்தில் புதிய முனிசிபல் கட்டிடம் இருக்கும்.அக்கரை
வழியாக நடந்து போனால் கிருஷ்ணன் கோயில் வரும்.
ரயில்வே ஸ்டேஷன் செல்கிற வழியும் அதுதான்.
1970 களில் அநேகமாக வீடுகள் ஏதும் இருக்காது.

திருப்பாற்க்கடலின் மிகப்பெரிய பயன் என்ன தெரியுமா? ஆத்திகர்களின்
மனது புண்படக் கூடாது என்ற கவனத்தோடு சொல்கிறேன். நூற்றுக்
கணக்கான சாமானிய மனிதர்களின் காலைக் கடன்கள் ஈடேறுகிற
இடமாக அது இருந்தது. தீபாவளியின் போது நெருக்கமான குடியிருப்புகளில்
ராக்கெட் விட முடியாதவர்கள் இங்கே வந்து விடுவார்கள். ஆண்டாள் கோயில்
யானையை குளிப்பாட்டுகிற காட்சியையும் பார்த்திருக்கிறேன். சப்பாத்திக்கள்ளி
செடிகளும்,ஊமத்த செடிகளும் நிறைய இருக்கும். மடவார் வளாகம் கோவிலுக்குச் செல்பவர்கள் இக் குளக்கரை பிள்ளையாரை கும்பிட்டுவிட்டு செல்வார்கள்.

பெயருக்கு சற்றும் பொருத்தமில்லாததாக இருந்த பாற்கடல் அது. நான் வங்காள விரிகுடாக் கடலை சென்னையில் இருபது வயதில் பார்த்தபோது அதன் பிரமாண்டம் என்னை வியக்க வைத்தது. என் நினைவுக்கு பதின் மூன்று வயது வரை பார்த்திருந்த திருப்பாற்கடல் வந்தது. சிரிப்பும் வந்தது

1 comment:

  1. இப்போது ஆக்கிரமிப்பு நிறைய. ஆகாய தாமரை நிறைந்திருக்கின்றன. யானை எல்லாம் குளிப்பாட்ட முடியாது. நிலைமை அவ்வளவு மோசமாக்கி விட்டார்கள்.
    நன்றி.

    ReplyDelete