Thursday 4 November 2010

இந்து நடுநிலைப் பள்ளி, தெற்கு மாடத் தெரு

தெற்கு மாடத் தெருவில் இருந்த இப்பள்ளியின் பிரதானக் கட்டிடம் இந்து உயர்நிலைப் பள்ளி கட்டிடத்திலேயே இருந்தது. ஐந்தாம் வகுப்பு மட்டுமே இங்கு இருந்தது.

எனக்கு திரு எ டி சீனிவாசன் என்ற ஆசிரியர் இருந்தார். அவரின் வீடு கோபுரத்திற்கு எதிரே கந்தாடைத் தெருவில் இருந்தது. அவர் ATS என்று சுருக்கமாகப் போடுகிற கையெழுத்து நினைவில் உள்ளது. (நீராவி ஸ்கூல் ரத்தினம் வாத்தியார் 7 க்கு இறக்கை முளைத்தது போல கையெழுத்துப் போடுவார்) சீனிவாசன் வாத்தியார் கொண்டை போட்டிருப்பார்.

இந்த ஸ்கூல் ஆண்டு விழா உயர்நிலைப் பள்ளியின் விழாவோடு இணைந்து பென்னிங்டன் நூலகத்தில் நடைபெறும். பென்னிங்டன் நூலகத்தை சென்னை கன்னிமாராவுக்கு அடுத்த பெரிய நூலகம் என்பார்கள். இவ்வளவு சின்ன ஊரில் எவ்வளவு பெரிய அறிவுப் பொக்கிஷம் பாருங்கள்! ஐந்தாம் வகுப்பு ஆண்டு விழாவில் ஒரு நாடகத்தில் பெண் வேடத்தில் நடித்தேன். மிக மிகச் சுமாராகவே செய்தேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஐந்தாம் வகுப்பின் ஆண்டுத் தேர்வில் இரண்டாம் ரேங்க்கில் வந்ததற்காக அடுத்த ஆண்டு விழாவில் ஒரு திருக்குறள் புத்தகம் பரிசாகப் பெற்றேன்.

மேலமாடத் தெருவைச் சேர்ந்த திரு சம்பத் பின் நாளில் எல் ஐ சி யில் வேலைக்கு வந்தார். அவரோடு மாடத் தெருவின் பழைய நண்பர்கள் பற்றி விசாரித்துக் கொண்டேன்.மேல மாட- தெற்கு மாட வீதி சந்திப்பிலிருந்து மேலரத வீதிக்குப்
போவதற்கு ஒரு சின்ன வீதி உண்டு. அதில் அப்பாவின் நண்பர் திரு. காசி விஸ்வநாதன் குடியிருந்தார். அவர் மடவார்வளாகம் அஞ்சல் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டர் ஆக பணி புரிந்தார்.

இந்தப் பள்ளிக்கூடத்திற்கு போகும் போது தினமும் யானை லாயத்தை பார்க்கலாம். ஆண்டாள் கோயிலின் வெளி மண்டபம் வாயிலாகப் போகவேண்டும். கோயிலுக்குள் நுழையும் இடத்தில் ஒரு பாட்டி ஐந்து பைசாவுக்கு கை நிறைய வறுத்த வேர்க்கடலை தருவார். அவ் வெளி மண்டபத்தில் முதல் கடையில் சின்னச் சின்ன போட்டோக்கள் விற்பனைக்கு வைத்திருப்பார்கள். அதில் உள்ள எம் ஜி ஆர் படம் ரூ 5 என்பதால் அதை வாங்குகிற நிலைமையில் இல்லை. தினமும் போய் நின்று பார்த்துவிட்டுப் போவேன். ஒரு காதி கடை ஒன்றை புதிதாக திறந்தார்கள். அதில் நாக்கைத் தொங்கவிட்ட போஸில் இருக்கிற நாய் பொம்மை ஒன்றை எல்லோரும் ஆர்வமாக பார்த்தார்கள். ஒரு RMP டாக்டர் , மருந்துக் கடை உண்டு. அவ் வரிசையில் போட்டோ பிரேம் கடை, பாத்திரக்கடை ஆகியனவும் உண்டு. கடைசிக் கடைகளாக இரண்டு பக்கமும் ஆண்டாள் ஸ்நானப் பௌடர் விற்கிற கடைகள் உண்டு. ஒரு தாடிக்காரப் பெரியவர் பெருந்துறவி போல அக்கடையில் அமர்ந்திருப்பார். அவ் வெளி மண்டபம் கோடைக் காலங்களில் கூட குளுமையாக இருக்கும்.







1 comment:

  1. அருமையான நினைவுகள்.
    ஊர் நிறைய மாறி விட்டன.

    ReplyDelete