Tuesday 9 November 2010

யானை

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்ட நேரங்கள் உண்டு. இரண்டு தடவை மதம் பிடித்து ஓடிய போது சுவாரஸ்யமான சில செய்திகள் உண்டு. ஒரு முறை மேற்கு தொடர்ச்சி மலைப் பக்கம் ஓடிச் சென்றது. இப்படி ஓடிய யானை திரும்ப ஊருக்குள் வந்த போது ஒரு பிள்ளையார் கோயில் அருகில் போய் நின்று விட்டது. நாளிதழ்களில் அது பிள்ளையார் முன்பாக மண்டி போட்டுக் கும்பிட்டதாக செய்தி போட்டார்கள். ( பிள்ளையார் பால் குடிக்கும்போது யானை மண்டி போடுவது நடக்க முடியாத ஒன்றா?). ஒரு முறை பாகன் ஓடுகிற யானை மேல் இருந்து தப்பிக்க மரத்தின் கிளை ஒன்றை பிடித்து தொங்கியதாக பரபரப்பாக பேசிகொண்டார்கள்.

1970 களின் முற்பகுதியில் ஓராண்டு காலம் கோவிலில் யானை இல்லாமல் இருந்ததுண்டு. யானை இல்லாத போது ஏதோ ஒன்றை அக்கோவில் இழந்ததைப் போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.

யானை சாணி போட்டுவிட்டு நகர்ந்தவுடன் சிறுவர்களெல்லாம் ஓடி போய் அதை மிதிப்பார்கள். அதற்கு மருத்துவக் குணம் உண்டு என்று பெரியவர்கள் சொல்வார்கள். யானைக்கு காணிக்கை கொடுத்தால் யானை முடியைப் பிடுங்கித் தருவார்கள். அதைக் கைகளில் கட்டிகொள்வார்கள்.

யானை குளியலுக்காக திருப்பாற்கடல் செல்லும்போது நாங்கள் குடியிருந்த அரங்கநாதர் சன்னதி தெரு வழியாகவே போகும்.

1 comment:

  1. தற்போது இங்கு யானை இல்லை. திருவிழாவிற்கு வாடகைக்கு எடுத்து கூட்டி வருகிறார்கள்.
    நன்றி.

    ReplyDelete