Thursday 4 November 2010

வெங்கடேஸ்வரா தியேட்டர்

டிவி என்ன , ரேடியோ கூட வீட்டில் இல்லாத காலத்தில் சினிமா தியேட்டர் மட்டுமே மக்களுக்கு பொழுதுபோக்கு. திருவில்லிபுத்தூரில் முதல் தியேட்டர் கணபதி ஆகும். மதுரை ரோட்டில் இருந்தது அது. எங்கள் வீட்டுப் பக்கத்தில் இருந்தது வெங்கடேஸ்வரா. திருவண்ணாமலை போகிற வழியில் 1970 களுக்கு பிறகு வந்த தியேட்டர் ஜெயகிருஷ்ணா ஆகும்.

புதிய ஜெயகிருஷ்ணா தியேட்டரில் பார்த்த படங்கள் குறைவு. நாளை நமதே என்ற எம் ஜி ஆர் படம் ஒன்று. நான் பார்த்த முதல் ஆங்கிலப் படம் - சில்வர்ஸ்டர் ஸ்டால்லோன் நடித்தது. பெயர் இப்போது நினைவில் இல்லை.

கணபதி தியேட்டரில் கூடுதலாக படம் பார்த்திருந்தாலும் பெயர்கள் நினைவுக்கு வர மறுக்கிறது. ஆனால் எமர்ஜென்சி காலத்தில் பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி கிடையாதல்லவா! பிந்தைய காலத்தில் அரங்கத்திற்குள் கூட்டங்கள் அனுமதிக்கப்பட்டவுடன் கணபதி தியேட்டரில் அ தி மு க ஒரு கூட்டத்தை நடத்தியது. நான் அக் கூட்டத்திற்கு போயிருந்தேன். எமெர்ஜென்சி அமலாக்கப்பட்டபோது எனக்கு வயது 12 வயதுதான். ஒரு நாள் மாலை ஸ்கூல் கிரௌண்ட் போய் விட்டு வந்தபோது ஜோதி ஸ்டுடியோ அருகில்தான் ஒரு கடையில் தொங்கிய தலைப்பு செய்திகளில் அவசரநிலைப் பிரகடனம்-தலைவர்கள் கைது என்பதைப் பார்த்தேன். தி மு க வைச் சார்ந்த ச. அமுதன் கைது செய்யப்பட்டதும் நினைவுக்கு வருகிறது. அன்றைக்கு ஜனதா சாப்பாடு ரூ 1 க்கு ஓட்டல்களில் போட்டதை அரசு ஆதரவாளர்கள் சிலாகித்துப் பேசியது ஞாபகத்திற்கு வருகிறது. பேச்சு சுதந்திரம் பறிக்கப் பட்டதன் சாட்சியமாக கணபதி தியேட்டர் பதிவாகி உள்ளது.

வெங்கடேஸ்வராதான் நிறைய படங்கள் பார்த்த தியேட்டர். தரை டிக்கெட் 25 பைசாவாகவும் பின்னர் 35 பைசாவாகவும் இருந்தது.நான் தனியாக போய் பார்த்த படம் இருளும் ஒளியும். படம் பார்க்க கொடுத்த காசை மூணு சீட்டு விளையாட்டில் கோட்டை விட்டு தியேட்டர் வாசலிலேயே நின்று வசனத்தைக் கேட்டுவிட்டு வந்த படம் குறத்தி மகன். ஸ்கூலில் அழைத்துப் போன படம் மீனாவின் கடிதம். விடுமுறையில் சந்தித்துப் பிரிந்த ஒரு சிறுமி தனது நண்பனுக்கு அனுப்புகிற கடிதம் கங்கை ஆற்றில் மிதந்து போய்ச் சேர்ந்து விடுகிற கதை சுவாரஸ்யமானது. அந்தப் படத்திற்கு போனபோது ட்ரைலராக இதயக் கனி படத்தின் முதல் பாடல் "நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற , நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற" காண்பிக்கப் பட்டது.

உரிமைக் குரல் அங்கேதான் பரபரப்பாக ஓடியது. கலைஞர் ஒரு முறை மேல ரத வீதி - வடக்கு ரத வீதி சந்திப்பில் பேசினார். அவர் வருகிற நாள் எம் ஜி ஆர் படம் ஓடக்கூடாது என்பதற்காக அன்று படம் மாற்றப்பட்டு கலைஞரின் மகன் மு க முத்து நடித்த இங்கேயும் மனிதர்கள் படம் போடப்பட்டது.

தியேட்டர் கியூவில் மூன்று வரிசைகள் இருக்கும். தியேட்டரில் பெல் அடித்தவுடன் வெளிக் கதவை திறப்பார்கள். சுவர் ஏறி குதித்து ஓடுவோம்.
எம் ஜி ஆர் முதலில் வரும்போது வரவேற்பதற்காக நிறைய காகிதச் சுருள்களை பறக்க விடுபவர்களில் நானும் ஒருவன். அப்பாவுடன் போனால் மட்டுமே ரூ 1 டிக்கெட் வாங்கி பால்கனி போகிற வாய்ப்பு கிடைக்கும்.

1 comment: